புதுக்கவிதை- (கவிப் பேரரசு வைரமுத்துவின் பார்வையில்)

புதுக்கவிதை
என்பது
சொற்கள் கொண்டாடும்
சுதந்திர தின விழா.

யாப்பு எனும் குதிருக்குள்
இலக்கணம் போட்ட
உத்தரவுக்குப் பயந்து உறங்கும்
சோம்பேறிச் சொற்களுக்கா
நீங்கள்
கவிதை என்று கட்டியங் கூறுவீர்?

ஒன்று கேட்கிறேன்:
உறைக்குள் இருந்தால்தான்
அதற்கு வாள் என்று பெயரா?

புதுக்கவிதை
எனும் போர்வாள்
இலக்கண உறையிலிருந்து
கவனமாகவே
கழற்றப்பட்டிருக்கிறது
ஏனெனில்
‘சுவர்கோழிகள் கூவிப்
பொழுது விடியாது’
என்பதந்தப் போர்வாளுக்குப் புரிந்தே இருக்கிறது.

மரபுக் கவிதைகள்-
மண்ணில் இருந்தாலும்
விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும்
மலர்வர்க்கங்கள்!

புதுக்கவிதைகள்-
விண்ணிலிருதாலூம்
மண்ணையே
பார்த்துக் கொண்டிருக்கும்
சூரிய சந்திரர்கள்.

Comments